Sunday, August 08, 2010

tha.mu.e.sa...

"தட்டி" வைத்திருந்தார்கள்
அது நடந்து இருபதுவருடமிருக்கலாம்.மதுரையிலிருக்கும் எங்கள் தலைமை அலுவலகத்தில் கிளையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அடிக்கடி பயிற்சி வகுப்புகள் நடத்துவார்கள். கிளையிலிருந்து வரும் தோழர்களும் எங்களைப் பார்த்து அளவலாவலாம் என்ற மகிழ்ச்சியில் வருவார்கள்.காலையில் சீக்கிரமாக வந்து பேசிக்கொண்டிருப்போம்.
ஒரு முறை ஒரு தோழர் மிகுந்த மன உளைச்சலோடு வந்திருந்தார்.புதிதாக பதவி உயர்வு பெற்றவர் அவர்.அதிகாரிகள் என்ன சொல்வார்களோ என்ற பயமும் இருந்தது.நான் அவரிடம் பேசிக்கொண்டிருந்தபோது என்னிடம் கூறினார்.அவர்கள் ஊரில் கலவரம் நடந்து கொண்டிருக்கிறது "நான்கு மணியானால் அவரவர்கள் வீட்டிற்குள் அடைந்துவிடுகிறார்கள் ஐந்து மணிக்கு இங்கிருந்து நான் கிளம்பி ஏழு மணைக்கு ஊர் போய் என் கிராமம் போவது ஆபத்தானது.பள்ளியில் படிக்கும் குழந்தைகளையும் கூட்டிச்செல் ல வேண்டும் "என்று வருத்தத்தோடு சொன்னார். மதியத்திற்குமேல் இரண்டு மணிக்கு கிளம்ப முடியுமா? என்றும் கேட்டார்.
அதிகாரியிடம் கேட்டபோது சம்மதிக்கவில்லை."யோவ்! நாளைக்கு ரசாபாசமாச்சு நீர்தான் பொறுப்பு" என்றதும் தயக்கத்தோடு சரி என்றார்.மதிய உணவு முடிந்ததும் தோழர் என்னிடம் விடை பெற வந்தார்.
வடநாட்டில் "ஜாட்"என்று ஒரு வகுப்பு உண்டு.ஆக்ரோஷமானவர்கள். அதே போல் தமிழ்நாட்டிலும் உண்டு.கரிசக்காட்டு புதரில் நம்ம ஊர் "ஜாட்" ஒருவர் கள்ளச் சாராயம் விற்று வந்தார்.நல்ல வியாபாரம். இதைப்பார்த்த பங்காளி ஒருவர் எதிக்கடை போட்டார்.வாய்ச்சண்டை, அடிதடி ஆயிற்று.மூத்தவர் இளையவரை "தூக்க" ஆளனுப்பினார்.இளையவர் புதருக்கு.முனியாண்டி வந்திருந்தான்.இளையவர் "முனியா! கொஞ்சம் கடையை பத்துக்க,இந்தா ஒதுங்கிட்டு வாரேன்"என்றார்
"தூக்க" வந்தவன் என்னத்த கண்டான்.கந்தக பூமில கொவில் பட்டர் கூட கருப்பு தான்
முனியன் சாஞ்சுட்டான்.சாராயக் கலவரம் சாதிக்கலவரமாய் விட்டது. விடைபெற வந்த தோழர் கிட்ட நான் " ஏன்யா! ஒரு கட்சி கூட வாயைத்திறக்கலையா?" என்று கெட்டேன்.உதட்டைப் பிதுக்கிவிட்டுச் சென்றார். கதவு வரை சென்றவர் திரும்பிவந்தார்."தோழர்! பஸ் ஸ்டாண்டில் ஒரு "தட்டி" வைத்திருந்தது" என்றார்."உயிரப் பறிக்கத்தெரிந்த மனிதர்களே உயிரை உங்களால் கொடுக்க முடியுமா. வாருங்கள் சாத்தூரை அமைதிப் பூங்காவாக மாற்றுவோம்" என்று எழுதியிருந்தது.என்றார் தட்டியின் கீழே தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம், சாத்தூர் கிளை என்றும் இருந்த்ததாக
சொன்னார்.நெஞ்சம் விம்ம நானும் அந்த சங்க உறுப்பினர்தான் என்றேன்.

8 comments:

காமராஜ் said...

இப்போது நினைத்தாலும் பூரிக்கிற விஷயங்களில் அதுவும் ஒன்று.அந்தத் தட்டியில் இருந்த வாசகங்கள் சாத்தூர் தமுஎச வுக்கு சொந்தமானவை.அப்போது ஒரு ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்தோம்.காவல்துறையின் உள்ளூர் அதிகாரிகள் மறுத்தார்கள்.சிறப்பு டி எஸ் பி ஒருத்தர் வந்து அவர்களை வாங்கு வாங்கென்று வாங்கினார். 'இந்தக்கையாலாகாத கட்சிக்காரங்க மத்தியில இவிங்களும் கம்யூனிஸ்ட் கட்சிக்கார்ங்களுந்தான் ஏதோ பண்றாங்க அதையும் வேண்டாமுன்னு சொல்லிட்டு வருஷம் பூரா மாயானக் காடாக்கச் சொல்ற்றிங்களா' என்று சொல்லிவிட்டு எங்களை அழைத்து அமரச்செய்து ஊக்கம் அளித்தார். ஊர்வலம் சகல பகுதி மக்களோடும் உணர்வுப்பூர்வமாய் நடந்தது. குழந்தைகளை முன்னாள் நடக்கவிட்டு 'ரத்தம் சிந்திய வீதிகளில் குழந்தைகள் எப்படி விளையாடும்' என்று கோஷம் எழுப்பினோம். நானும் மாதுவும் சேர்ந்தெழுதியது.அப்போது எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி எங்களோடு இருந்தார். தமுஎச தோழர்களின் குழந்தைகள் முன்னனியில் கோஷம் போட்டு வந்தநாட்கள் சாத்தூரில் எங்களுக்கு மிகுந்த மரியாதையையும் பெயரையும் வாங்கித்தந்தது. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியின் ஊழியர் தோழர் ராமகிருஷ்ணனும் எங்களோடு இருந்தார்.

kashyapan said...

மிகுந்த மகிழ்ச்சி காமராஜ்! சாத்தூர் வந்து தமுஎகச நண்பர்களிடம் நேரில் கூற ஆசை.முடியாமல் போய்விட்டது.குறைந்த பட்சம் இடுகை மூலமாவது தெரிவிக்கலாமே என்று எழுதினேன்.நினைக்க நினைக்க பிரமிப்பாக,வியப்பாக,இனிமையாக இருக்கிறது தமுஎச வின் செயல் பாடுகள்...காஸ்யபன்.

மாதவராஜ் said...

தோழர்!

அந்த வெப்பமான நாட்கள் இன்னும் நினைவிலிருக்கிறது. இரவின் எந்த நேரம் வந்து இறங்கினாலும், சாத்தூர் மனித சஞ்சாரம் மிக்க இடமாய், சாவகாசமாய் இருக்கும். அந்தக் கலவரங்களுக்குப் பிறகு எல்லாம் பறிபோனது.எதாவது சொல்ல வேண்டும், செய்ய வேண்டும் என்னும் வேகம் இருந்தது. அதுதான் அந்த தட்டி போர்டும், நாங்கள் நடத்திய ஊர்வலமும்.

பகிர்வுக்கு மிக்க நன்றி.

kashyapan said...

மாதவ்ஜி! அந்தத் தட்டியை வைத்தது என் மதிப்பிற்குரிய" களவாணிகள்" நீங்களிருவரும் தான் என்பது இது நாள் வரை எனக்குத்தெரியாது.காமராஜ்,மாதவ்ஜி எவ்வளவு பிரியமான,பெருமைக்குரிய நட்பு...வாழ்த்துக்கள்.....காஸ்யபன்.

veligalukkuappaal said...

1) மாதவுக்கும் காமராசுவுக்கும் பிற சாத்தூர் தமுஎச தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். நீங்கள் பல விசயங்களிலும் வழிகாட்டியாக இருக்கின்றீர்கள், மகிழ்ச்சி தோழர்களே! இந்த நேரத்தில் பன்னிரண்டு வருடங்களுக்கு முன்னால் பச்சைபசேல் எனத் துலங்கும் கோவை மாவட்டத்தின் வீதிகளில் மனிதர்களின் சிவப்பு ரத்தம் வெள்ளமாக ஓடியதையும் நினைக்காமல் இருக்க முடியவில்லையே! எப்பேர்ப்பட்ட ஊர் அது! அங்கும் கூட கலவரத்தின் வெப்பமும் வேதனையும் அதே தகிப்புடன் தணியாமல் இருந்தபோது, சாலைகளிலும் சாக்கடைகளிலும் மரங்களிலும் மனித சதைகள் உறைந்து தொங்கியபோதும், முதல் முதலாக ஒரு சமாதானக்குரல் எழுப்பியதும் மதங்களை மறந்து மனிதர்களாக இருப்போம் என ஒரு பெரும் கூட்டத்தைக் கூட்டியதும் தமுஎச வே என்பதை வரலாறு மறக்காது.
2) ஆறு எழு வருடங்களுக்கு முன்னால் கோவைக்கு சென்றிருந்தேன், கோட்டைமேடு பகுதியில் அப்போதும் திரும்பிய இடங்களில் எல்லாம் போலீஸ் தடுப்புக்களும் கெடுபிடிகளும் பையைத் திறந்து பார்ப்பதும் அடையாள அட்டை கேட்பதும் (அன்றாடம் காய்ச்சிக்கு ஏது அடையாள அட்டை? எங்கே போய் முட்டிக்கொள்ள?) ...மிகக் கேவலமாக உணர்ந்தேன். நான் பயணம் செய்த டாக்சியின் ஓட்டுனரிடம் 'எப்போதுமே இப்படித்தானா?' என்றேன், ஆம் என்றார். சரி, நான் வெளியூர்க்காரன், இதே கோட்டை மேடு பகுதியில் வாழும் மக்களுக்காவது இந்த செக்கிங்குகளில் இருந்து விதிவிலக்கு உண்டா எனக் கேட்டபோது அவர் சொன்ன பதில் நம்ப முடியாததாக இருந்தது...'அவர்களுக்கும் அப்படியே'. அதாவது காலகாலமாக கோட்டைமேடு பகுதியில் வசிக்கும் குடிமகனும் ஒரு டீ குடிக்கவோ வெத்திலை பாக்கு வாங்கவோ மருத்துவமனைக்குப் போகவோ தனது அன்றாட சாதாரண வேலைகளைப் பார்க்க வெளியே சென்றாலும் கூட அவன் ஒரு நாளைக்கு ஐம்பது முறை அப்பகுதியில் கிராஸ் செய்தாலும் ஐம்பது முறையும் அவன் சோதனைக்கு உள்ளாக்கப்படுவான்! அதாவது 1998க்குப்பிறகு தினந்தோறும் பலமுறை பலமுறை இந்த வெறுப்பூட்டும் கெடுபிடியும் கேவலமும்! தான் பிறந்த பூமியில் தன்னையே தீவிரவாதியாகப் பார்க்கும் அரசையும் போலீசையும் வெறுப்புடன் பார்க்கும் ஒரு இஸ்லாமியன் என்ன செய்வான்? இதன் (1998 இன்) தொடர்ச்சியாக குடும்பம் குடும்பமாக பல இஸ்லாமியர்கள் வாடகை வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்ட கசப்பான சம்பவங்களும், பேருந்துகளில் ரயில்களில் பொது இடங்களில் இஸ்லாமிய அடையாளங்களுடன் இருப்பவர்களை விரோதியாக மற்றவர்கள் பார்த்ததும் இவர்கள் கூனிக்குறுகி தலைகுனிந்தபடியே இருப்பதும்...கற்பனை செய்ய முடியாத கொடுமைகள்... இதற்கெல்லாம் காரணமான உண்மையான தீவிரவாதிகள் இப்போதும் மழுங்க சிரைத்து கோட் சூட் அணிந்து வாசனை திரவியங்கள் பூசி அமெரிக்க இங்கிலாந்து ஆங்கிலத்தை இலக்கணம் தப்பாமல் பேசி துப்பாக்கி ஏந்திய z பிரிவு போலீசுடன் ஊர் ஊராக சுற்றிக்கொண்டே இருக்கின்றார்கள், இந்திய சமுதாயம் எல்லாவற்றையும் பாத்துக்கொண்டே இருக்கின்றது...
இக்பால்

kashyapan said...

வாருங்கள் இக்பால் அவர்களே! நீங்கள் எழுத வேண்டிய பின்னூட்டங்கள் நிறைய இருக்கின்றன. நிரப்புங்கள்....காஸ்யபன்.

- யெஸ்.பாலபாரதி said...

கலை இரவுகளுக்காகவே மதுரை, சாத்தூர், திருவண்ணாமலை, தென்சென்னை என்று ராமேஸ்வரத்திலிருந்து கிளம்பி வந்த நாட்கள் மறக்க முடியாதவை.

பல்வேறு மக்கள் பிரச்சனையை எள்ளளோடு இடித்துரைத்த நாட்கள் நினைவுக்கு வந்து போயின தோழர்.

நன்றி

தோழன்
பாலா

vimalavidya said...

very glorious memories..ARPUTHAM COMRADE...the little article shouldering heavy news and matters..