Wednesday, August 14, 2013

அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளித்தந்தையின் பாடுகள் ......!!!



ஆத்திகர்களால் எல்லாவற்றையும் கடவுளின் செயலாகச் சொல்லித் தங்கள் அறியாமையைச் சுலபமாக மறைத்துவிட முடிகிறது. தெருவில் தடுக்கி விழுந்தால் "இன்னைக்கு அப்படி விழணுமுன்னு எழுதியிருக்குது" என்றோ, "காலையில பிள்ளையாரைக் கும்பிட்டுப் போன்னு சொன்னப்ப கேக்காம ஓடினே இல்லே.. அதான் தடங்கல் வந்து தடுக்கி விட்டுருச்சு" என்றோ கூசாமல் வருந்தாமல் கண்ணையும் அறிவையும் கட்டி விட முடிகிறது. 

நாத்திகம் சார்ந்த வளர்ப்பு அப்படியல்ல. தொடர்ந்து வலியுறுத்த வேண்டியிருக்கிறது. இயற்கையின் விளைவுகளாகட்டும், மனிதர்களின் செயல்களாகட்டும்.. எல்லாவற்றுக்கும் ஒரு அறிவுசார்ந்த விளக்கம் சொல்லி பிள்ளைகளின் மனதைச் சீராக்க உதவி செய்ய வேண்டியிருக்கிறது.
"சூரியனை உண்டாக்கியது ஜீசஸ் தானே டேடி?" என்றான் மகன்.
"இல்லை" என்றேன்.
"அப்ப இந்துக் கடவுள் உருவாக்கிச்சா?"
"இல்லை"
"மொகாமெட்?"
"சூரியனை யாரும் உருவாக்கவில்லை"
"டேடி.. உனக்கு எதுவும் தெரியலை. ஸ்கூல்ல நீ 'F' தான் வாங்கியிருப்பே"
"சரி. சூரியனைப் பத்தி என்ன சொன்னாங்க டீச்சர்?"
"உலகத்துல எதுவும் நடக்கணும்னா சூரியனோட சக்தி வேணும்னு சொன்னாங்க"
"சூரியன்ல என்ன இருக்கு தெரியுமா?"
"முழுக்க முழுக்க நெருப்பு. சரியா?"
"ம்ம். சூரியன்ல இருப்பது முழுக்க முழுக்க gas"
விழுந்து விழுந்துச் சிரித்தான். "குசுவா?"
"அதுவும் வாயுதான். சூரியன்ல இருப்பது ஹைட்ரஜன்.."
"அப்படின்னா?"
"ஒரு gas. இப்போதைக்கு அது போதும். இங்கே வா".
கணினியில் ஒரு படத்தை வரையத் தொடங்கினேன். மகன் இன்னும் விசித்திரமான ஓசைகளுடன் சிரித்துக் கொண்டிருந்தான். மேசை விளக்கை ஒரு நிமிடத்துக்கு மேல் எரியவிட்டு அணைத்தேன். அவனை அழைத்து பல்பைச் சுட்டினேன்.
"இந்தா, இதைத் தொடு"
"என்னை என்னா லூசுனு நினைச்சியா? அது சுடும். நீயே தொடு"

ஜூரத்துக்கு உபயோகிக்கும் டெம்பரசர் பட்டி ஒன்றைப் பிரித்து பல்பில் ஒட்டினேன். விர்ரென்று நூற்றுப்பத்து பேரந்ஹைட்டைத் தொட்டுச் சுர்ரென்று இளகிச் செத்தது பட்டி. 
"இதோ பார், நூத்துப்பத்து டிகிரி. சூரியனைத் தொட்டா இது போல நூறு மடங்கு சுடும். சூரியன்ல இருக்குற gas எரியும் போது சக்தி கிடைக்குது, அதுவே ஒளியாவும் சூடாவும் பூமிக்கு வருது"
"அப்ப சூரியனை யாரும் உண்டாக்கினா அவங்க கையெல்லாம் சுட்டிருக்குமே?"
"ஒருவேளை ultra mega super cool gloves போட்டுக்கிட்டு உண்டாக்கினாங்களோ என்னவோ? இந்தப் படத்தைப் பாரு. அண்டத்துல புழுதியும் வாயுவும் வேகமா கலந்து சுத்துறப்போ அது நட்சத்திரமா மாறிடும். நட்சத்திரம் எரியத் தொடங்குறப்போ சக்தியை வெளிவிடும். பிலியன் வருஷக்கணக்கா எரியும். சூரியனும் இதுபோல உருவான ஒரு நட்சத்திரம். எத்தனையோ பிலியன் வருஷம் எரிஞ்சு எல்லா வாயுவும் அடங்கிடும். அப்போ இந்த சூரியன் நமக்கு ஒளி தராது"
"அப்ப உலகம் அழிஞ்சிடுமா? நாமெல்லாம் செத்துருவோமா?"
"கடலுக்கடியில ரொம்ப ஆழத்துல இருக்குற சில புழுக்களும் கிருமிகளும் தவிர மிச்ச எல்லாம் செத்துரும்"
"புழு பூச்சி உயிரோட இருக்குமா? அப்ப கடவுள் நம்மை சாகடிச்சுடுவாரா? this is not fair. grandma said god loves us" என்றான்.
"இந்தச் சூரியன் அழிய இன்னும் அஞ்சு பிலியன் வருசமாவது ஆகும். இதோ பார். நடுவுல இருக்கோம். இன்னும் இவ்வளவு தூரம் எரிஞ்சு வரணும். அதனால கவலைப்படாதே"
"அப்ப அந்த டயத்துல எல்லா மனுசங்களும் செத்துடுவாங்களா? பூமிக்கு என்னாகும்? this is not fair"
"யாருக்குத் தெரியும்? சூரியன் அழியுறதுக்கு முன்னால நாம பூமியைத் தூக்கிக்கிட்டு வேறே ஏதாவது சூரியனைத் தேடிப் போகலாம்"
"இப்படி அழிக்கணும்னா எதுக்காக கடவுள் இதை உண்டாக்கணும்? makes no sense"
அவன் இன்னும் 'not fair'ல் இருந்தான். எனினும், 'கடவுள் இதைப் படைத்தார்' என்பதில் அர்த்தம் இல்லை என்று எண்ணியது சற்று நிறைவாக இருந்தது. இது ஒரு நல்ல துவக்கம் என்று தோன்றியது.

    ளமையிலேயே கற்பிக்க வேண்டும். ஒரு புறம் 'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி' சொல்லிக் கொடுப்பது போல இன்னொரு புறம் தெரிந்த உண்மைகளையும் சொல்லித் தர வேண்டும். "பூமியைக் கடலுக்குள் கொண்டு ஒளிப்பதா?. கடலே பூமிக்குள் தானே இருக்கிறது? பிறகு பன்றி வேஷமிட்டு பூமியைக் கடலடியிலிருந்து மீட்பதா? ஒரு படகில் உலகின் அத்தனை ஜீவராசிகளின் பிரதிநிதிகளை அடைத்து வெள்ளம் வடியும் வரை பார்த்திருப்பதா? வெள்ளத்தில் எல்லாமே அழிந்தது என்றால் திடீரென்று ஒரு பறவை மட்டும் எப்படி உயிரோடு வெளியே திரிந்தது?" போன்ற கேள்விகளுக்கு உண்மையான பதிலைச் சொல்ல வேண்டும். வீட்டிலும் வெளியிலும் எண்ணச் சுதந்திரம் வேண்டும். 'வளர்ந்த பிறகு தானே புரிந்து கொள்ளட்டும், இப்போதைக்கு என் பாட்டன் அப்பன் சொன்னது போல் கும்பிட்டுக் கிடக்கட்டும்' என்ற மனப்பாங்கு மாற வேண்டும். 

நமது கல்வித்திட்டம் ஆத்திகக் கல்வித்திட்டம். நாத்திகத்துக்கு இடமில்லை. அதுவும் தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளிகளில் சுத்தமாக ஆத்திகச் சுண்ணாம்பு பூசப்பட்டிருக்கிறது. 

கொஞ்சம் பின்னோக்கிப் போனோமானால் நாத்திகம் இயல்பாகவே கல்வியாக வழங்கப்பட்டிருப்பதை அறியலாம். நான்காம் நூற்றாண்டு வாக்கில் 'சார்வகம்' எனப்படும் கடவுள்/மதம் விலக்கியத் தத்துவக்கல்வி நம் நாட்டில் இருந்தது. மெள்ள அழிந்துவிட்டதாகத் தெரிகிறது. அதற்கும் வெகு காலம் முன்னால் கடவுள், மதம், மற்றும் மூட நம்பிக்கைகளின் எதிர்வாதமாக நிறையச் சொல்லப்பட்டிருக்கிறது. வேதங்களையும் புராணங்களையும் பராமரிக்கும் அளவுக்கு இவற்றைப் பராமரிக்கவில்லை. 

நேர்மையானக் கல்வியை வழங்க வேண்டியது பெற்றோர், ஆசிரியர் மற்றும் அரசாங்கத்தின் கடமை. ஒருதலைக் கல்வியில் முழுமையான அறிவோ பக்குவமோ வளராது என்பது நமக்கே புரியவில்லை. அரசாங்கத்துக்கு எங்கே புரியப்போகிறது? இளமையிலேயே படித்தால்.. பிடித்தால்.. இன்னும் நூறு வருடங்களுக்குள் கடவுள் மதம் போன்ற குருட்டு நம்பிக்கைகள் தானாகவே அடங்கி ஒழிய வாய்ப்பு உண்டு. 

இதற்காகத் தனியாக ஏதும் செய்யத் தேவையில்லை. கடவுள் இருப்புச் சிந்தனைகளுக்கு வழங்கப்படும் அதே சலுகைகள் கடவுள் மறுப்புச் சிந்தனைகளுக்கு வழங்கினால் போதும். இதில் நான்கு பாடங்கள் என்றால் அதில் நான்கு பாடங்கள். "தெய்வம் நமக்குத் துணை பாப்பா" என்று சொல்லிக் கொடுத்தால் "கடவுள் இல்லையடி பாப்பா" என்றும் சொல்லிக் கொடுக்க வேண்டும். இதில் குழப்பம் உண்டாகும் வாய்ப்பு உண்டு என்றாலும் கண்மூடித்தனம் உண்டாக வாய்ப்பில்லை. குழப்பத்தை விடக் கண்மூடித்தனம் கொடியது. பிள்ளைகள் சிந்திக்கக் கூடியவர்கள். நல்ல ஆசிரியர்களின் துணையுடன் தங்கள் குழப்பத்தைத் தீர்த்துக் கொள்வார்கள். அவர்களைக் கண்மூடித்தனக் கிணற்றுக்குள் தள்ளிவிடுவது நாம் செய்யும் மன்னிக்க முடியாத குற்றமாகும்.

காவடி எடு, தேங்காய் உடை, மலைக்குப் போ என்பவை சாதாரணச் செய்திகளாகப் பாமரர்களைச் சென்றடைவது போல், 'கண்மூடித்தனத்தை விடு' என்பதும் சாதாரணச் செய்தியாகப் பாமரர்களைத் தொடும் வழியைத் தேட வேண்டும். 'கடவுளைக் கும்பிடு', 'மதத்தை மதி' என்பவற்றின் எளிமை, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதில் இல்லை. இங்கே தான் நாத்திகம் தடுக்கி விழுந்ததாகத் தோன்றுகிறது. நாத்திகத்தின் செய்தி, 'கடவுளைக் கும்பிடாதே' என்பதல்ல. இது நாத்திகச் செய்தியாக இருக்கும் வரை, சிந்தனை சார்ந்த நாத்திகம் வளர்வது கடினம். அப்படியெனில், நாத்திகத்தின் செய்தி என்ன? கடவுள் கிடையாது என்பதே. கடவுள் இல்லாமல் உலகம் இயங்கி வருகிறது, தொடர்ந்து இயங்கும் என்பதே. கடவுள் மத நம்பிக்கைகள் மனிதம் முழுமையடைவதைத் தடுக்கும் இடர்கள் என்பதே.

( அப்பாதுரை அவர்களின் " கலர்சட்டை  நாத்திகம் " என்ற வலைப்பதிவிலிருந்து )





2 comments:

'பரிவை' சே.குமார் said...

நல்ல பகிர்வு... பகிர்வுக்கு நன்றி ஐயா...

hariharan said...

அருமையான பதிவு...

என் மகன் இரண்டாம் வகுப்பு படிப்பவன் ஒரு நாள் சொர்க்கம் நரகம் பற்றி சொன்னான், நரகம் பற்றி விவரணைகள் கொதிக்க காய்ச்சிய எண்ணை, தீயில் போடுவது, கிருமிகளுக்கு தீவனமாக கொடுப்பது என்று சொன்னான். இவ்வள்வு விசயங்கள் உனக்கு எப்படி தெரியும் என்றேன். பள்ளியில் படிக்கும் சக மாணவர்கள் சொன்னார்களாம்! அவர்களுடைய பெற்றோர்கள் இந்த பிஞ்சு மண்டையில் எத்தனை குப்பையை கொட்டுகிறார்கள். நான் சொன்னேன், தவறு ச்ய்யக்கூடாது என்று மனிதனை பயமுறுத்தத்தான் கடவுளும், நரகமும் சொர்க்கமும், இதைப்பற்றி பள்ளியிலே நீ விவாதிக்கவேண்டாம் என்றேன்.

என்னைப் பார்த்து சாமியில்லை பூதமில்லை என்பான், ஊருக்குச் சென்றால் தாத்தா போடும் நாமத்தை கேட்டு நெற்ற்யில் வாங்குவான். அவனைப்பொருத்தவரை பெரியவர்களை ச்ந்தோசப்படுத்த வேண்டும். அவ்வள்வுதான். ஆனால் பள்ளியில் சொல்லித்தருகிற கடவுள் அவர்கல் மனதில் எளிதாக உட்கார்ந்துவிடுகிறது.